சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் 5,040 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் இருந்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் என உலகம் முழுவதும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் அலையின் போது இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் வழக்குப் பதிவும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது மூன்றாவது அலை எந்த நேரத்திலும் பரவும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் புதிய உருமாறிய வைரஸ் மத்திய பிரதேசத்தில் 5 பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்டங்களால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற பண்டிகை காலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்கும் பட்டாசுகளை வாங்குவதற்கும் கடைத் தெருக்களில் அதிகம் குவிகிறார்கள். சென்னையில் இருந்து துணிகளை வாங்க பல ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தி.நகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட இடங்களில் குவிகிறார்கள்.
புத்தாடைகள் எடுக்கும் உற்சாகத்தில் கொரோனாவை மறந்துவிடுகிறார்கள். 3ஆவது அலை எப்போது வேண்டுமானாலும் பரவும் என சொல்லப்படுவதால் மக்களை கண்காணிக்க போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்த 5,040 பேரிடம் இருந்து ரூ 10 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சூடான் ஆட்சிக்கவிழ்ப்பு: ராணுவம் போராட்டக்காரர்களை சுட்டதில் 7 பேர் பலி – நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா
மேலும் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் முக கவச சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வெளிவரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-in-chennai-over-rs-10-lakh-collected-as-fine-in-one-day-for-not-wearing-mask-437041.html