சென்னை: சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடற்கரை சாலையில் காலை முதலே மழை கொட்டி வருகிறது. தலைமைச்செயலகத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்தவர்களின் மீது விழுந்தது. இந்த விபத்தில் பெண் காலவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற உள்ளதன் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்தது.
காலையிலிருந்து மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகர், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை…அடுத்த 1 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்குமாம்
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பழமை வாய்ந்த மரம் சற்று முன் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்துள்ளார். 2 கார்கள் சேதம் அடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று நேரம் வரை தங்களுடன் பேசிக்கொண்டிருந்த பெண் காலவர் திடீரென மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால் காலையில் பணிக்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-in-chennai-woman-killed-in-tree-fall-at-chennai-secretariat-437699.html