Chance of heavy rain in Chennai for the next 3 hours || சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில்  தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை நீடிக்கும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சென்னையில் பல இடங்களில் 10செ.மீ-க்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 14செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/07071034/Chance-of-heavy-rain-in-Chennai-for-the-next-3-hours.vpf