சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. 

மேலும் தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், பெய்து வரும் தொடர்கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விட்டப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/11124200/School-college-holidays-in-Chennai-Kanchipuram-and.vpf