சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலையில் இருந்து தீவிர கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க விடிய விடிய பெய்த மழை இப்போதும் விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் தீவு போல காட்சி அளிக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வெள்ளம்
சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் , தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தி நகர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இங்கு ஏற்கனவே வெள்ள நீர் சூழ்ந்து வடியாமல் இருந்தது. இரவு முழுக்க பெய்த மழையால் கூடுதல் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தீவு
கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் தீவு போல காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் பம்ப் மூலம் மழை நீரை வெளியேற்றம் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மீண்டும் பெய்த மழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மெரினாவில் கடல் எது, கரை எது என்று கரை எது என்று தெரியாத அளவிற்கு முழுக்க முழுக்க பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சுரங்க பாதை
சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன . மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்: வியாசர்பாடி சுரங்கபாதை, கணேஷபுரம் சுரங்கபாதை ,அஜாக்ஸ் சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, பழவந்தாங்கல் சுரங்கபாதை, தாம்பரம் சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, காக்கன் சுரங்கபாதை ஆகிய சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்து
மழைநீர் தேங்கியுள்ளதால் பின்வரும் சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது, i) கே,கே நகர் – ராஜ மன்னார் சாலை ii) மயிலாப்பூர் – டாக்டர் சிவசாமி சாலை iii) ஈ வி ஆர் சாலை – காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை iv) செம்பியம் – ஜவஹர் நகர், v)பெரவள்ளூர் – 70 அடி சாலை, vi) புளியந்தோப்பு – டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு vii) வியாசர்பாடி – முல்லை நகர் பாலம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது
மக்கள் அவதி
கனமழை காரணமாக ஏற்கனவே வீடுகளில் முடங்கிய மக்கள் வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பல இடங்களில் முட்டிக்கு மேல் மழை சூழ்ந்துள்ளது. தியாகராயநகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சென்னையில் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-stuns-chennai-road-closed-flood-in-many-areas-people-stranded-in-homes-438603.html