சென்னை: உலகநாடுகளை வரைபடத்தில் மட்டுமே பார்த்து வந்த சென்னை மாணவிக்கு விமானத்தில் துபாய் செல்லும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமகிரஹ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடைபெற்ற கல்வி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்
சமகிரஹ சிக்ஷா அபியான் திட்டம்
சென்னை செங்குன்றம் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்த நாகராஜ் ஒரு கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா. இவர் 100 சதுர அடி கொண்ட வீட்டில் தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். சங்கீதா செங்குன்றம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு விமானத்தில் செல்லவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு. ஆனால் உலக நாடுகளை வரைபடத்தில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு இதுநாள் வரை இருந்து வந்தது. இந்நிலையில் சமகிரஹ சிக்ஷா அபியான் கீழ் மாநில அளவிலான கல்வி வினாடி-வினா போட்டியில் பள்ளிகளில் நடத்தப்பட்டது. இது அனைத்து பிரிவினருக்கும் கல்வி வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மத்திய-அரசின் திட்டமாகும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் துபாய்க்கு 3 நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல அழைத்து செல்லப்படுவர்.
ஆதிதிராவிடர் பள்ளி மாணவி வெற்றி
இந்த வினாடி-வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர், 89 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்ற இந்த போட்டியில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவி சங்கீதா வெற்றி பெற்று துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். பொதுவாகவே சங்கீதாவுக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வரை பாஸ்போர்ட் இல்லாத சங்கீதாவுக்கு துபாய் செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்க திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் உதவியது. திருவள்ளூர் ஆட்சியர் சங்கீதாவை நேரில் அழைத்து பாராட்டினார்.
கலெக்டர் நேரில் பாராட்டு
இதுகுறித்து சங்கீதா படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட் ரவி கூறியபோது, சங்கீதா படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தும் மாணவி என கூறினார். தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்த பேசிய சங்கீதா, “நான் விமானத்தில் துபாய்க்கு செல்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. என் வீட்டில் கழிப்பறை கூட இல்லை; நாங்கள் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகிறோம்,” என்றார். மேலும் கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எதிரான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல என தெரிவித்த சங்கீதா, கொரோனா தொற்று காலத்தில், லேப்டாப், இண்டர்நெட் இல்லாமல் ஆன்லைனில் படிப்பை தொடர முடியாமல் போராடினேன் என கூறினார்.
ஐஏஎஸ் படிக்க வேண்டும்
இதுமட்டுமின்றி தனக்கு ஐஏஎஸ் படித்து உயர் பொறுப்பில் வந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று ஆசை என்றும், “தன்னைப் போல பின்தங்கிய மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்தார். மக்கள் தண்ணீர், வீடு, கழிப்பறை மற்றும் கல்வி போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறும் சமுதாயத்தை உருவாக்க விரும்புவதாகவும் சங்கீதா தெரிவித்தார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-adi-dravidar-schoolgirl-wins-ticket-to-dubai-441419.html