சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளதாகத் தமிழக கால்நடைத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாகப் பராமரிப்பதைக் கண்காணிக்கக் கோரிய இந்தியக் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக கால்நடைத் துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐஐடி வளாகத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்த 14 நாய்களுக்குச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பரில் இரு முறை ஐஐடி வளாகத்தில் அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு நடத்தியதில், நாய்கள் முறையாக, ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவித்த ஐஐடி நிர்வாக தரப்பு, நாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பிலும், நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ததில் நாய்கள் உரிய வகையில் பராமரிக்கப்படுவதாகவும், எந்த விதிமீறலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வார்த்தில் விசாரணை
இதையடுத்து, தெரு நாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை எனவும், அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசும் நேரத்தில், அடிப்படை கடமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அரசு அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய ஐஐடி தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-veterinary-dept-told-madras-high-court-that-57-dogs-have-died-at-the-chennai-iit-441606.html