அழகான மைதானம்
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை பார்க்கும் போது இது சென்னையா இல்லை வெளிநாடா என்று தோன்றும் அளவுக்கு இந்த மைதானம் இருந்தது.
அனுமதி இல்லை
ஆனால், இந்த மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புரதான சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதனை இடித்து கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.இது குறித்து பல முறை அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இடிக்கப்பட்டது
மைதானம் முழுவதும் புதியதாக இருக்க, ஒரு பகுதி மட்டும் பழைய தோற்றத்தில் இருந்தது ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. இந்த நிலையில், இதனை மாற்றி அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி தந்தது. இதனையடுத்து அண்ணா பெவிலியன் பகுதியை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது . இதனை அவ்வழியாக பார்த்து செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள், பல வரலாற்று போட்டிகளை அமர்ந்து கண்டுகளித்த இடம் இடிக்கப்படுகிறதே என வருந்தினாலும், புதிய அமைப்பு வருவதை எதிர்நோக்கி மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
ஐ.பி.எல் 2022
ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு தொடருக்குள் மைதானத்தை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4 மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளதால் இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் புத்தம் புதிய தோற்றத்தில் காணப்படும் மைதானத்தில் சி.எஸ்.கே. களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://tamil.mykhel.com/cricket/chennai-chepauk-anna-pavillion-erected-for-new-structure-029820.html