சென்னை அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த இருவர் கைது : 150 கிலோ குட்கா பறிமுதல் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, குடோனில் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீசார் அரசங்கழனி சந்திப்பில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, ஏற்கனவே குட்கா விற்பனை வழக்கில் சிறை சென்று வந்த பீகாரை சேர்ந்த 26 வயதான சுனில்குமாரை மடிக்கி சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சுனில்குமாரை பெரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது தாழம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரித்து வருவது தெரியவந்துள்ளது.

பின்னர் சுனில்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் தினேஷ், தலைமை காவலர்கள் இலங்கோ, சரவணன், காவலர்கள் மனோகர், சஞ்சீவி உள்ளிட்ட போலீசார் தாழம்பூர் ஊராட்சி, நத்தம் பிரதான சாலை எம்ஜிஆர் தெருவில் சுனில்குமார் வசித்து வரும் வீட்டை சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அங்கிருந்த பீகாரை சேர்ந்த 21-வயதான சச்சின்தாஸை கைது செய்த போலீசார் குடோனில் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் பீகாரை சேர்ந்த இருவரும் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் போதை வஸ்துகளான மாவா உள்ளிட்ட குட்கா பொருட்களை தாங்களாகவே தயாரித்து வந்தது போலீசார்க்கு தெரியவந்தது.

இருவரும் சேர்ந்து வீட்டில் தயாரிக்கும் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளை சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுனில்குமார் கடந்த 7ஆம் மாதம், தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த வழக்கில் இதே காவல் நிலையம் மூலம் சிறை சென்றதும், அப்பொழுது அவரிடமிருந்து 120 கிலோ குட்கா பறிமுதல் செய்ததும், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Must Read : வாயோடு வாய் வைத்து மூச்சுகொடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் – நெகிழவைக்கும் வீடியோ

தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்த பீகாரை சேர்ந்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 150 கிலோ குட்காவை பறிமுதல் செய்த பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் தினேஷ், தலைமை காவலர்கள் இலங்கோ, சரவணன், காவலர்கள் மனோகர், சஞ்சீவி உள்ளிட்டோரை பரங்கிமலை துணை ஆணையர் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

செய்தியாளர் – ப.வினோத்கண்ணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-two-persons-from-bihar-have-been-arrested-for-selling-gutka-near-chennai-sur-637927.html