தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 17-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! சென்னை வானிலை மையம்… – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வரும்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 17-ந் தேதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குறையத்தொடங்கி குளிர் வாட்டத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 17ந்தேதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியளார்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர்,  வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.

நாளை (வியாழன்) முதல் 19-ந்தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நாளை மறுதினம் வருகிற 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் இன்று, நாளை மற்றும் 19-ந் தேதிகளில் குமரிக்கடல் பகுதி மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் தலா-3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://patrikai.com/a-new-barometric-depression-will-form-bay-of-bengal-on-the-17th-december-chennai-meteorological-center/