சென்னை: கென்யாவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து திருப்பதி சென்ற பெண்ணுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஓமிக்ரான் கொரோனா தான் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா என அனைத்து நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
குட் நியூஸ்! 7000க்கு கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. 5 மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி இந்தியாவிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம்
ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த சில வாரங்களில் வந்த 3000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்களில் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓமிக்ரான் பாதிப்பு
அதில் தற்போது வரை 13 பேரின் முடிவுகள் கிடைத்துள்ளது. அதில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 8 பேருக்கு டெல்டா தொற்றும், மற்ற 4 பேருக்கு non sequence கொரோனா வகையும் உறுதியாகியுள்ளது. மற்றவர்களின் முடிவுகளும் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வழியாக
39 வயது மதிக்கத்தக்கப் பெண் கென்யா நாட்டில் இருந்து கடந்த டிச.10ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு காரில் சென்ற அவர், அங்குத் தனிமைப்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருப்பதியில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பப்பட்டது. அதில் தான் அவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதியானது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களைத் திரட்டி அவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2ஆவது ஓமிக்ரான் கேஸ்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. ஆந்திராவில் உறுதி செய்யப்பட்ட 2ஆவது ஓமிக்ரான் கேஸ் இதுவாகும். முன்னதாக கடந்த டிச.12இல் அயர்லாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. . தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 57 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகியுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/andhra-pradesh-reports-second-omicron-case-after-kenya-returnee-tests-positive-443006.html