டெல்லி: இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு முதல் 5 ஜி சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5ஜி சேவையின் சிறப்புகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி முதல் ஓடிடி தளங்கள் வரை பெரும்பாலானவற்றுக்கு 4ஜி தொழில்நுட்பம் தேவை.
தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்
இந்நிலையில், தற்போது அடுத்தகட்டமாக 5ஜி சேவை பல நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கடந்த ஆண்டு முதலே 5ஜி செல்போன்கள் வெளியாகி வருகிறது.
13 நகரங்கள்
இந்தச் சூழ்நிலையில், அதிவேக 5ஜி சேவை அடுத்தாண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்தது. நாடு முழுவதும் முதற்கட்டமாக 13 நகரங்களில் இந்த 5G சேவை தொடங்கப்படும். சென்னை. பெங்களூரு, அகமதாபாத், சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நிறுவனம்
அதேநேரம் எந்த டெலிகாம் நிறுவனம் முதலில் 5G சேவைகளைத் தொடங்கும் என்பது குறித்த தகவல்களை அரசு வெளியிடவில்லை. இந்தியாவில் உள்ள 3 டெலிகாம் நிறுவனங்களும் – Jio, Airtel மற்றும் Vi ஏற்கனவே இந்த நகரங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 5G என்பது LTE (long-term evolution) மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளின் அடுத்த தலைமுறையாகும். 4ஜி சேவையில் ஸ்மார்ட்போன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில், 5G தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்போன்களை தாண்டி பல்வேறு சாதனங்களுக்கு அதிவேக இணையச் சேவை வழங்க முடியும்.
ஏன் இந்த நகரங்கள்
முதற்கட்டமாக நாட்டில் 13 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் முதலில் அமல்படுத்துவதன் மூலம் எளிதாகப் பலரைச் சென்றடைய முடியும். பலரை 4Gஇல் இருந்து 5ஜி தொழில்நுட்பத்துக்கு அப்டேட் செய்ய முடியும் என்பதாலேயே பெருநகரங்களில் இது முதலில் கொண்டு வரப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் என்பதால் இதன் விலை தொடக்கத்தில் அதிகமாகவே இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் இதைக் கொண்டு வரும்போது விலையைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பெருநகரங்களில் தான் 5G பேண்டுகளை சோதனை செய்ய ஏதுவாக உயர் கட்டிடங்கள் அதிகம் இருக்கும்.
5ஜி தொழில்நுட்பம் என்றால் என்ன?
5G தொழில்நுட்பம் low, mid, and high-frequency என மொத்தம் 3 பேண்டு ஸ்பெக்ட்ரத்தில் செயல்படுகிறது. குறைந்த (low) அலைவரிசை ஸ்பெக்ட்ரமில், 100 Mbps வேகத்தில் இணையச் சேவையில் பெற முடியும். அதேநேரம் mid, and high-frequency ஸ்பெக்ட்ரத்தில் இணைய வேகம் அதிகரிக்கும் என்றாலும் கூட அதன் கவரேஜ் பகுதி குறையும். மேலும் சிக்னல்களின் ஊடுருவல் திறனும் குறையும். high-frequency ஸ்பெக்ட்ரத்தில் அதிகபட்சமாக 20 Gbps வேகத்தில் இணையச் சேவை பெறலாம். ஒப்பீட்டுக்குச் சொல்ல வேண்டும் என்றால் 4ஜி சேவையில் அதிகபட்சமாக 1 Gbps வேகத்தில் இணையச் சேவையைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 4G நெட்வொர்க்குகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களுக்காகவே வடிவமைக்கப்பட்டவை! அதேநேரம் 5ஜி தொழில்நுட்பம் அதைத் தாண்டி பல ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ன சிறப்பு
5ஜி சேவைக்கான இந்தியத் தொழில்நுட்பம் குறித்த சோதனைகள் கடந்த 2018இல் தொடங்கப்பட்டது. இது டிசம்பர் 31, 2021க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனைக்கு டெலிகாம் துறை நிதியளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.224 கோடி செலவிட்டுள்ளது. ஐஐடி, ஐஐஎஸ்சி என மொத்தம் 8 நிறுவனங்கள் இந்த சோதனையில் பங்கெடுத்துள்ளது. இந்தியாவுக்காக உள்நாட்டில் டெவலப் செய்யப்பட்ட இந்த 5ஜி தொழில்நுட்பம் பல வகையில் நமக்குப் பயன்படும். மேலும், அடுத்த தலைமுறை 6G தொழில்நுட்ப சேவைக்கான அடித்தளமாகவும் இது அமையும்.
மக்களுக்கு என்ன பயன்?
இந்த புதிய 5ஜி சேவை மூலம் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களில் இணையச் சேவை அதிகரிக்கும். உதாரணமாக, விளையாட்டுப் போட்டிகளின் பல கேமரா கோணங்களில் ஒரே நேரத்தில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். VR ஹெட்செட்கள் பயன்படுத்தி அதிவேக வீடியோ கேம்களை விளையாடலாம். ஸ்மார்ட்போன்களைப் பொருத்தவரை, ஏற்கனவே பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 5G தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளன.
Source: https://tamil.oneindia.com/news/delhi/5g-services-in-chennai-delhi-mumbai-more-cities-from-2022-all-things-to-know-about-5g-in-tamil-443537.html