சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க மெரினா சாலை மூடல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, 

தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழூவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

பொதுவாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை மெரினா கடற்கரையிலும், கடற்கரை சாலைகளிலும் மக்கள் அதிகம் கூடுவது உண்டு. ஆனால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதனை தவிர்க்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மக்களால் மெரினா கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டை கொண்டாட மக்கள் சாலைகளில் வலம் வருவதை தடை செய்யும் பொருட்டு சென்னையில் இன்று இரவு முழூவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை நகர சாலைகள் வெறிச்சோடி கானப்படுகின்றன.

சென்னையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும் சென்னையில் இரவு 12 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகின்றன. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/12/31232834/Chennai-Marina-Road-closed-to-avoid-New-Year-celebrations.vpf