சென்னை: வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே அதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்தே வந்தது.
தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை… ஓ!! இது தான் காரணமா!!
கொரோனா பரவல்
இந்தச் சூழ்நிலையில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட பிறகு நிலைமை அப்படியே மாற தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை காட்டிலும் மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருந்தது.
தலைநகர் சென்னை
தமிழகத்தில், குறிப்பாகத் தலைநகர் சென்னையில் நிலைமை சற்று கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் முதல் வாரம் 1088 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது டிச. 2ஆம் வாரம் 987ஆகக் குறைந்த போதிலும் 3ஆம் வாரம் இது 1039ஆகவும் கடைசி வாரம் 1800க்கு மேலாகவும் பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் மட்டும் சென்னையில் 776 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நடவடிக்கை
தமிழகத்தில் நேற்று பதிவாகியிருந்த கொரோனா பாதிப்பில் 50% மேல் சென்னையில் மட்டுமே பதிவாகியிருந்தது. சென்னையில் வரும் காலங்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. தினசரி சென்னையில் குறைந்தது 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒரு முறை
அதேபோல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை விரைவில் கண்டறியவும், வைரஸ் பரவலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இதுபோல 15 நாட்களுக்கு ஒரு முறை மாதிரிகள் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழு
மேலும், இது போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகச் சிறப்புக் குழுக்களையும் அமைத்துள்ளது சென்னை மாநகராட்சி. மேலும், இதுபோன்ற பொது இடங்களுக்கு வரும் மக்கள் 2 டோஸ் வேக்சின் முழுமையாகப் போட்டிருக்க வேண்டும் என்றும் இதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா 2ஆம் அலை
கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த போது, கொரோனா பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு அறிகுறி இருந்தாலே அவர்களுக்கு மருத்துவ கிட் வழங்கப்பட்டது. அதேபோல பல்கலைக்கழக விடுதிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டன. மேலும், ஆக்சிஜன் வசதி கொண்ட சிறப்பு ஆம்புலன்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் இந்தத் திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-took-action-to-ensure-early-corona-identification-in-city-444127.html