சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் டெல்டா கொரோனா காரணமாக 2ஆம் அலை ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் விரைவாகத் தினசரி கேஸ்கள் குறையத் தொடங்கியது.
பல மாதங்களாக அப்படியே குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இந்த முறை ஓமிக்ரான் கொரோனா காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மின்னல் வேகத்தில் பரவும் 3ஆம் அலை.. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் அதே நிலைதான்.. தாண்டவமாடும் கொரோனா
மத்திய அரசு
ஏற்கனவே, கடந்த டிச. மாத இறுதி முதலே கொரோனா பாதிப்பு நாட்டில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கேஸ்கள் அதிகமாக உள்ளதாகவும் இதைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இந்த மாநிலங்களில் இரவு ஊரடங்கு, பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன.
தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தலைநகர் சென்னையில் தான் 3ஆம் அலை முதலில் மோசமடைய தொடங்கியது. கடந்த டிச. 24இல் 146ஆக இருந்த தினசரி கேஸ்கள் அதன் பின்னர் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. ஜனவரி 4ஆம் தேதி ஆயிரத்தைக் கடந்த தினசரி கேஸ்கள் வெறும் 4 நாட்களில் அதாவது ஜன.8இல் 5 ஆயிரத்தைக் கடந்தது. அதேபோல கொரோனா விகிதமும் கிட்தட்ட 30% நெருங்கியது. இதனால் சென்னைவாசிகள் பெரும் அச்சம் கொண்டனர்.
தலைநகர் சென்னை
அதிகபட்சமாகக் கடந்த ஜன. 16ஆம் தேதி சென்னையில் 8987 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். அன்றைய தினம் மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதமும் 30% தொட்டது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 8987 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது இதுவே முதல்முறையாகும். 3ஆம் அலை தொடங்கும் முன், கடந்த மே 12இல் ஒரே நாளில் 7564 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைய தொடங்கிய கொரோனா
தலைநகரில் தொடர்ந்து கொரோனா அதிகரித்தால் எங்கு கொரோனா படுக்கைகளுக்குச் சிக்கல் ஏற்படுமோ என அஞ்சப்பட்டது. நல்வாய்ப்பாகக் கடந்த ஜன. 16க்கு பின்பு மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஜன.17இல் 8591என குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு ஜன.20இல் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இது நேற்றைய தினம் மேலும் குறைந்து 7038ஆக உள்ளது. அதேபோல நேற்று பாசிட்டிவ் விகிதமும் 25%ஆகக் குறைந்துள்ளது.
முடிவுக்கு வரும் 3ஆம் அலை
கடந்த ஒரு வாரமாகத் தினசரி 30,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் போதிலும் வைரஸ் பாதிப்பு குறைந்தே வருகிறது. இது சென்னையில் 3ஆம் அலை முடிவுக்கு வந்துள்ளதையே தெளிவாகக் காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வரும் நாட்களிலும் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
படுக்கைகள்
அதேபோல சென்னையில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஏனென்றால் லேசான பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் சுமார் 1400 மட்டுமே நிரம்பியுள்ளது. அதேபோல ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 1200% நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு உயர்வது ஏன்
தலைநகரில் கொரோனா தொடர்ந்து குறைந்து வரும் போதிலும், மற்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் 3653 பேருக்கும் செங்கல்பட்டில் 2250 பேருக்கும் மேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிரத் திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால்தான் மற்ற தலைநகர் சென்னையில் வைரஸ் குறைந்தாலும் ஒட்டுமொத்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-in-chennai-reached-its-peak-and-moving-towards-down-for-last-6-days-446153.html