சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமி: சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் அருகே வாழப்பாடியிலும் ‘சூப்பர் கிங்ஸ்’ என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி நேற்று தொடங்கப்பட்டது. இதில் இணைய விரும்பும் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ‘சூப்பர் கிங்ஸ் அகாடமி’ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், ‘நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். அந்த விளையாட்டுக்கு இந்த வகையில் எங்களது பங்களிப்பை திருப்பி வழங்குவதை சிறப்பானதாக கருதுகிறோம். எங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் இது சரியான வாய்ப்பாகும். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களும், மிகச்சிறந்த வசதி வாய்ப்புகளும் இங்கு கிடைக்கும்’ என்றார்.

Source: https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/02/28032050/Chennai-Salem-Cricket-Academy-Chennai-Super-Kings.vpf