பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது சென்னை ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது மேட் இன் இந்தியா காரை வெளியிட்டது.
Tamil Nadu, First Published Mar 5, 2022, 9:54 AM IST
பி.எம்.டபிள்யூ. குழுமம் மேட் இன் இந்தியா ஒரு லட்சமாவது யூனிட்டை சென்னை ஆலையில் இருந்து வெளியிட்டு உள்ளது. இந்த மைல்கல் யூனிட் பி.எம்.டபிள்யூ. 740Li M ஸ்போர்ட் எடிஷன் ஆகும். இது பி.எம்.டபிள்யூ. இந்தியாவில் உற்பத்தி செய்யும் 13 மாடல்களில் ஒன்று ஆகும். 7 சீரிஸ் தவிர 2 சீரிஸ் கிரான் கூப், 3 சீரிஸ், 3 சீரிஸ் கிரான் லிமோசின், M340i, 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ உள்ளிட்ட மாடல்களை பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்து வருகிறது.
“இந்த மைல்கல் குழுவின் கடின உழைப்பு, திறமை மற்றும் மாறாத் தன்மை உள்ளிட்டவைகளுக்கு கிடைத்த பரிசு. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பி.எம்.டபிள்யூ. மற்றும் மினி கார்கள் உலகத்தரத்திற்கு இணையானவை என்பதை இந்த மைல்கல் நிரூபித்துள்ளது.”
“உள்நாட்டு உற்பத்தியை 50 சதவீதம் வரை அதிகரித்து இருப்பது, உள்ளூர் உதிரிபாகங்கள் வினியோகம் செய்வோருடன் இணைந்து இருப்பது அனைவருக்கும் பயன் அளித்து வருகிறது. இந்திய வளர்ச்சி பாதையில் தொடர்ந்து தலைசிறந்த உற்பத்தி திறனை கடைப்பிடிப்பதில் பி.எம்.டபிள்யூ. சென்னை ஆலை தொடர்ந்து அதிக கவனம் செலுத்தும்,” என பி.எம்.டபிள்யூ. குழும சென்னை ஆலையின் நிர்வாக இயக்குனர் தாமஸ் டோஸ் தெரிவித்தார்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் தனது 2022 X3 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய துவங்கியது. இதன் பெட்ரோல் மாடல் உற்பத்தி பணிகள் ஜனவரி 2022 மாதத்திலும், டீசல் மாடல் உற்பத்தி பிப்ரவரி மாதத்திலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பி.எம்.டபிள்யூ. இந்தியா குழுமத்தில் 650-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
Last Updated Mar 5, 2022, 9:56 AM IST
Source: https://tamil.asianetnews.com/business/bmw-rolls-out-1-00-000th-made-in-india-car-from-its-chennai-plant-r89883