சென்னை கொசு இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை! துணை மேயர் மகேஷ்குமார் தகவல் – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை கொசு இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,. கொசு ஒழிப்பு பணிக்காக 3463 பணியாளர்கள் உள்ளதாகவும், சென்னை உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர்  கால்வாயில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என  துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் துணைமேயராக பதவி ஏற்றுள்ள மகேஷ்குமார், சென்னை அடையாறு, சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார், சென்னை சைதாப்பேட்டை  மாம்பலம் கால்வாயில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகளும் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  “உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாகவும்,  அதன்பேரில் சைதாப்பேட்டை அப்பாவும் நகரில் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் எழுப்பினர், இந்த நிலையில் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொசு இல்லாத நகரமாக சென்னையை  மாற்றுவதற்கான பணிகளைத் தொடங்கி இருப்பதாக கூறியவர்,  இந்த பணிக்காக 3463 பணியாளர்கள் பணியில் உள்ளனர், மேலும் 67 கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளது மேலும் தேவைப்பட்டால், தேவைக்கேற்ப இயந்திரங்களும் வாங்கப்படும் என்றவர், சென்னை முழுவதும்  கொசு ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும், எதிர்காலத்தில் சென்னையில்  மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், தற்போதைய நிலையில் சென்னையில் குடிநீர் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், சென்னையில் உள்ள கால்வாய்களில் அனுமதியின்றி கழிவு நீரை வெளியேற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முறையாகக் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தவர்,  சட்டத்திற்குப் புறம்பாகக் கால்வாய்களில் கழிவுகள் கொட்டும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Source: https://patrikai.com/chennai-will-be-a-mosquito-free-city-deputy-mayor-maheshkumar-information/