Exclusive: எனது தலையாய பணி இது தான்! நிறைய கற்று வருகிறேன்! விவரிக்கும் சென்னை மேயர் ப்ரியா ராஜன்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியே தனது தலையாய பணி எனக் கூறுகிறார் மேயர் ப்ரியா ராஜன்.

மேயராக பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் நிறைய கற்று வருவதாகவும், தனக்கு புதியதொரு அனுபவம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் தொகுப்பு பின் வருமாறு;

சென்னை மாநகராட்சி மேயரானார் திமுகவின் பிரியா ராஜன்! முதல் பட்டியலின மேயர் என்ற பெருமை பெற்றார்சென்னை மாநகராட்சி மேயரானார் திமுகவின் பிரியா ராஜன்! முதல் பட்டியலின மேயர் என்ற பெருமை பெற்றார்

மேயர் பொறுப்பு

”பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்பதற்கு முன்னர் நானும் வழக்கமான ஒரு சராசரி பெண்ணாக தான் இருந்தேன். குடும்பத்தை கவனித்துக்கொள்வது, குழந்தையை பார்த்துக்கொள்வது என நேரம் செலவிட்டேன். ஆனால் இப்போது மேயர் என்ற பெரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் நாள்தோறும் நிறைய கற்றுக்கொள்கிறேன், நிர்வாக ரீதியிலான பணிகளை அறிந்து வருகிறேன். எனக்கு தரப்பட்டுள்ள பொறுப்பு மூலம் மாநகராட்சியை நல்லமுறையில் செயல்படுத்துவேன்.”

சிங்காரச் சென்னை

”சென்னை என்பது மிகவும் பரபரப்பான ஒரு பெருநகரம். இங்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய பெரும் கடமை எனக்கு இருக்கிறது. சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி பணிகள் நல்லமுறையில் நடக்கும். முதலமைச்சரை நேரில் சந்தித்து நான் வாழ்த்து பெற்ற போது, மக்களுக்காக சிறப்பாக பணி செய்ய வேண்டும் என என்னிடம் அறிவுறுத்தியுள்ளார். நிச்சயம் அதன்படி செயல்படுவேன்.”

ஒவ்வொரு நாள்

”சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளாகவே உணர்கிறேன். தினமும் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. இப்போது நான் கவனித்து வருவதை எல்லாம் விரைவில் செயல்படுத்தவும் செய்வேன். மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு தான் இப்போது முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்து வருகிறேன். இது தான் தற்போது எனது தலையாய பணி என்று கூட சொல்லலாம்.”

மழைக்காலம்

”அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்குள் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என உழைத்து வருகிறோம்.” இவ்வாறு சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன் காணொலியை ஒன் இந்தியா தமிழ் யூடியூப் பக்கத்திலும் காணலாம்.

English summary
Chennai Mayor Priya rajan Special interview about corporation administration

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mayor-priya-rajan-special-interview-about-corporation-administration-451403.html