முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடைபெற இருக்கிறது.
200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்த நிலையில், போட்டியை நடத்த பல நாடுகள் முயற்சித்தன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.
பல்வேறு நாடுகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள் என 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் போட்டி என்பதால் விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி உள்ளிட்டவை கருத்தில் கொண்டு டெல்லி அல்லது சென்னையில் போட்டியை நடத்த பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் சென்னையில் போட்டி நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போட்டி நடைபெற இருப்பதால் இந்தியாவின் சார்பில் பல அணிகள் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் திருவிழாவால் சென்னை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் மேலும் அதிகரிப்பதற்கும் பயிற்சி மையங்கள் போன்றவை அதிக அளவில் திறக்கப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் உருவாகி இருக்கின்றன. மறுபுறம் 200 நாடுகளின் வீரர்கள் சென்னைக்கு வர உள்ளதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடும் சென்னையும் கவனம் பெறும். அதனால் சர்வதேச அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என கருதப்படுகிறது.
இதையும் படிக்க: ‘பெருமை கொள்ளும் தருணம்’- சென்னையில் நடைபெறுகிறது செஸ் ஒலிம்பியாட் 2022
Source: https://www.puthiyathalaimurai.com/newsview/132363/The-Chess-Olympiad-Festival-is-to-be-held-in-Chennai-for-the-first-time