குட் நியூஸ் சொன்ன மேயர் பிரியா… சென்னை மக்கள் குஷி! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை மேயர் பிரியா ராஜன்(28) மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்றதில் இருந்து மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. திரு.வி.க.நகர் தொகுதியில் 170 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் ஊக்கத்தொகை, குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்களுடன் ஆலோசனை என பம்பரமாக சுழன்று வருகிறார்.

கட்சித் தலைமை நம்பி ஒப்படைத்த பொறுப்பை சிறப்பாக காக்க வேண்டியது தனது கடமை என தெரிவித்துள்ள மேயர் பிரியா, மக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என வெளிப்படையாக கருத்து தெரிவித்து லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் ’வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் திங்கட்கிழமை நடந்தது. இந்த முகாமை இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உப்பு சப்பில்லாத நிதி நிலை அறிக்கை; ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

“சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பரிந்துரைகளை ஏற்று கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து என்று பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மக்களுக்கு பயன் தரும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். திமுக அரசின் வேளாண் பட்ஜெட்டை காற்றுப்போன பலூன் என கூறிய அதிமுக தான் தற்போது காற்றுப் போன பலூன் போல உள்ளது” என்றார்.

அதனைத் தொட்ர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, சென்னையில் இம்மாத இறுதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனமும், ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது மூவாயிரம் பேர் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு வார்னிங் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

மேலும், மார்ச் 30ம் தேதி மண்டல குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், அதற்கு முன்பு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறினார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-mayor-priya-rajan-said-budget-will-submit-this-week/articleshow/90366300.cms