சென்னை: தாயின் ஆண் நண்பரால் 7-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைப்பகுதியில் கணவரைப் பிரிந்த பெண் ஒருவர், தன்னுடைய மகள், மகனுடன் வசித்து வருகிறார். இந்தக் குடும்பத்தினர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெண்ணின் மகளுக்கு 13 வயதாகிறது. அவள், 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து வாழ்ந்த வந்த அந்தப்பெண்ணுக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த பிஷ்வாஜித் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணுடன் பிஷ்வாஜித், குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், பிஷ்வாஜித், 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இந்தத் தகவல் தெரிந்ததும் பிஷ்வாஜித்தைப் பிரிந்து மகன், மகளுடன் அந்தப் பெண் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் செல்ல 7-ம் வகுப்பு மாணவி வந்தாள். அதைப் பார்த்த பிஷ்வாஜித், மாணவியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். அப்போது பிஷ்வாஜித்துடன் மாணவி சண்டை போட்டுள்ளார். இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் அம்மா புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்கு பதிவு செய்து மாணவியிடமும் மாணவியின் அம்மாவிடமும் முதலில் விசாரித்தார். பிறகு குற்றம்சாட்டப்பட்ட பிஷ்வாஜித்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பிஷ்வாஜித்தை போலீஸார் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட பிஷ்வாஜித், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தாயின் ஆண் நண்பரால் 7-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-pocso-case-6