சென்னை சென்ட்ரல் சுரங்க நடைபாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை,

சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.

சென்னை மத்திய சதுக்கம், நிழல் தரும் செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தில் சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. மத்திய சதுக்கத்தின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எழில் கூடுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் நவீன கட்டமைப்புகளுடனும், அழகிய பூங்காங்களுடனும் மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/03/30075529/Chennai-Central-Mining-Corridor-First-Minister-MK.vpf