பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கைது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த சமயத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் 6 மாத காலத்துக்கு மட்டும் தற்காலிகமாக நர்சுகள் பணி அமர்த்தப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட இந்த நர்சுகளின் சேவை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவடைய தொடங்கியுள்ளது.

இதையடுத்து தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியாக அறிவிக்க வலியுறுத்தி எம்.ஆர்.பி.கொரோனா நர்சுகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் 818 நர்சுகளின் பணிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு, அவர்களை தமிழக அரசு பணியில் இருந்து விடுவித்தது.

முற்றுகை போராட்டம்

இதையடுத்து நேற்று காலை எம்.ஆர்.பி.கொரோனா நர்சுகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்து அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அங்கிருந்து புறப்பட்ட நர்சுகள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த நர்சுகள் என 200-க்கும் மேற்பட்டோர் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தொகுப்பு ஊதிய பணி ஆணை வழங்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நர்சுகள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

கைது

இருந்தபோதிலும் நர்சுகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண் போலீசார் உதவியுடன் நர்சுகளை கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே ‘தள்ளுமுள்ளு’ ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து 4 மாநகர பஸ்கள் மூலம் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

இதனால் சென்னை மெரினாவில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/05030034/Nurses-arrested-for-protesting-in-Chennai-Marina.vpf