சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ இன்று மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்குகிறார்.

துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் வரும் நடப்பு நிதி ஆண்டான 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த கணக்குகளை வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சர்பஜெயதாஸ் (வார்டு எண்-41) தாக்கல் செய்வார். முக்கிய அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா அறிவிப்பார் என கூறப்படுகிறது.

விவாதம்

சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த பட்ஜெட் மீதான விவாதமும் இன்று மதியம் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த பட்ஜெட்டில் இடம்பெரும் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவை ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட உள்ள ‘பட்ஜெட்டில்’ சொத்து வரி குறித்த புதிய அறிவிப்புகள், வருவாய் அதிகரித்தல், மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் உள்ளதால், அந்த கடனை குறைக்கும் விதமாக இந்த ‘பட்ஜெட்’ அமைய வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,240 கோடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/09003658/Chennai-Corporation-budget-filed-today.vpf