திருப்பூரில் பழமைவாய்ந்த 2 கோயில்களை இடிக்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
திருப்பூர் மாவட்டம், பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, இரு கோயில்களையும் இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ள பாளையத்தைச் சேர்ந்த கோபிநாதனும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நூறாண்டுகள் பழமையான இந்த கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை எனவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டப்பட்டதாகவும் கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவேவ இந்த கோயில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதிகள், நூறாண்டுகள் பழமையான இரு கோயில்களை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும், மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
[embedded content]
Source: https://www.maalaimalar.com/news/topnews/2022/04/14194141/3672633/Tamil-news-Interim-ban-on-demolition-of-2-ancient.vpf