சென்னை தெருக்களில் அட்டகாசம்; 4 புள்ளிங்கோக்கள் கைது..! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை மதுரவாயல் டி.கே நகர் பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை கற்களால் தாக்கி உடைத்து நொறுக்கி உள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காம்பவுண்ட் சுவரை இடித்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்ட போது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மதுபோதையில் இளைஞர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மதுபோதையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த மதன் (22) சங்கர் (21) சாமுவேல்(20) மேலும் மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (21) ஆகிய 4 பேர் தான் இரவு மது போதையில் தகறாரில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நான்கு பேரையும் மதுரவாயல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/four-arrested-for-threatening-public-in-chennai-maduravoyal/articleshow/90882647.cms