சென்னை ஐஐடி.யில் 12 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு: 2000 பேருக்கு பரிசோதனை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி. யில் 12 மாணவா்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னை ஐஐடி.யில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு, காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால், அந்த மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில், மூன்று பேருக்கு கடந்த புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். இந்த மாணவிகள் பெசன்ட் நகா் கடற்கரை, தரமணி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனா்.

இந்தநிலையில் மாணவிகளுடன் தொடா்பில் இருந்த 18 மாணவா்களுக்கு வியாழக்கிழமை ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 9 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது சென்னை ஐஐடி.யில் 12 மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், அதே வளாகத்தில் தனி கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு: இதையடுத்து மக்கள் நல்வாழ்வு துறை முதனன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காலை மற்றும் மாலை என இரண்டு முறை சென்னை ஐஐடி ளாகத்தில் ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தாா்.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை ஐஐடி வளாகத்தில் சில மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 12 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், வளாகத்தில் உள்ள அனைத்து மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 2,000 பேருக்கு இரண்டு நாளில் பரிசோதனை செய்து முடிக்கப்படும். தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்க, கிண்டி கிங் அரசு கரோனா மருத்துவமனை தயாராக உள்ளது.

பொதுமக்கள், ரயில், பேருந்து என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை. எனவே, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே தொற்று பரவலை தடுக்க முடியும்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/apr/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3831198.html