சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடையில் மின்சார ரயில் ஏறி நின்றதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய அந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது.
ஒரு கட்டத்தில் ரயில் நிலைய நடைமேடையின் மீது மோதிய மின்சார ரயில் அதில் ஏறி சென்று ஒரு கடையின் சுவற்றின் மீது மோதி ரயில் நின்றுள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
விபத்து நடந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விடுமுறை நாளான இன்று குறைவான மக்கள் கூட்டமே இருந்ததால் பெரும் அசம்பாவீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ரயிலின் முன் பகுதி இந்த விபத்து சேதமடைந்து உள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/train-accident-happened-in-chennai-beach-railway-station-455980.html