சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2ஆவது பிளாக்கில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன. இந்த பகுதியில் சர்ஜிக்கல் பிளாக்கும் உள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 3 நோயாளிகள் சிக்கியுள்ளதாக தகவல்
இந்த வார்டுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் வைத்துள்ள குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.
கல்லீரல் அறுவை சிகிச்சை
இந்த தீவிபத்து காரணமாக அருகில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவிற்கும் பரவியதாக தெரிகிறது. கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.
5 தீயணைப்பு வாகனங்கள்
தகவலறிந்த 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதாக தெரிகிறது. மேலும் சில உபகரணங்களும் வெடிக்கும் சப்தம் கேட்பதாகவும் தெரிகிறது. எனவே அந்த கட்டடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளாரகள்.
மா சுப்பிரமணியன் ஆய்வு
சம்பவ இடத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வருகை தந்து தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறார்கள். தீவிபத்து ஏற்பட்ட தளத்திற்கு மேல் தளத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வேறு ஒரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
இதுகுறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை. அது மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கும் குடோன் ஆகும். அந்த பகுதியின் மேல் தளத்தில் உள்ள நோயாளிகளும் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். தீ முழுவதும் அணைந்தால் மட்டுமே அந்த அறையில் வேறென்னவெல்லாம் இருந்தன என்பது தெரியவரும் என்றார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/fire-accident-in-chennai-rajiv-gandhi-government-hospital-456259.html