சென்னை: சமுதாய நலக்கூடங்களை முன்பதிவு செய்ய இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 63 சமுதாய கூடங்களும், இரண்டு கலையரங்கங்களும் குடும்ப சுப நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு நாள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றை முன்பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு விண்ணப்ப படிவத்துடன், முகவரி சான்று, வயது சான்று, புகைப்படம், வாடகை, கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்திற்கான வரவோலை, சமுதாய கூடம் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இவை ரொக்கமாகவோ, வங்கி காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
சமுதாயக்கூடம் முன்பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நடைபெறும் ஆறு மாதத்திற்கு முன்பும், கலையரங்கங்களை மூன்று மாதத்திற்கு முன்பும் முன்பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
சமுதாயக்கூடம் மற்றும் கலையரங்கம் காலியாக உள்ளதா மற்றும் கட்டண விபரம் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அனைத்து சமுதாயக் கூடங்கள், கலையரங்கங்களில் பொதுமக்களுக்கான அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் சமுதாய கூடங்கள், கலையரங்கங்களை முன்பதிவு செய்யும்போது, இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/796019-community-hall-booking-do-not-be-fooled-by-intermediaries-chennai-corporation.html