சென்னை: மிக விரைவில் சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை நூறு விழுக்காடு அளவு நிறைவு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது புதைவட மின்கம்பிகள் அமைப்பது தொடர்பாக கார்த்திகேயன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு, தகவல் தொழில்நுட்ப சாலை ஆகிய ஐந்து கோட்டங்களில் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்றார்.
“அடுத்த ஆண்டு மேலும் ஏழு கோட்டங்களுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி முழுவதும் இந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டபிறகு மற்ற மாநகராட்சிகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தில் முன் அறிவிப்பு இன்றி அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மின்சார வாரியம், தடையற்ற மின்சாரம் வழங்குவதை தொடர்ந்து உறுதி செய்து வருவதாகக் கூறுகிறது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி துரித கதியில் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20220507-88364.html