Heavy rain in Chennai and suburbs …! || சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை…! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. 

அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் படி, சென்னை புரசைவாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்ககம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம்  உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/05/10073235/Heavy-rain-in-Chennai-and-suburbs.vpf