அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு- ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சென்னை கோர்ட் நோட்டீஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ஜூன் 23-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை! தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசிட்டாங்க - எடப்பாடி பழனிசாமிஅதிமுக – பாஜக உறவில் விரிசல் இல்லை! தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசிட்டாங்க – எடப்பாடி பழனிசாமி

என்ன விவரம்?

அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017 ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்,
இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற கருத்துகள்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதிமுகவினருக்கு நோட்டீஸ்

விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

நிலைப்பாடு என்ன?

சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கைவிடப்படக் கூடும்; அதேபோல் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகள் மீண்டும் உருவாக்கப்படலாம் என்கிற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது அதிமுக பொதுக்குழு விவகாரம்.

English summary
Madras Court has issued Notice to OPS, EPS on AIADMK general council meeting on June 23.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-court-issues-notice-to-ops-eps-on-aiadmk-general-council-meeting-461317.html