சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

வேலூர்

ஆடுதொட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், திருவண்ணாமலை மற்றும் சித்தூர் செல்லும் பஸ்கள் வேலூர் கோட்டை அருகே உள்ள ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்தும், மற்ற பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டன.

சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்பக்கம் உள்ள பகுதியில் இருந்து இயக்கப்பட்டன.

இந்தநிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற 21-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது. சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

ஆடுதொட்டி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் சித்தூர் வழித்தட பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

பயணிகள் ஏமாற்றம்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் அந்தப் பகுதி நேற்று இரவு முதல் வெறிச்சோடியது.

எனினும், ஒருசில பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆடுதொட்டி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு சென்றனர்.

புதிய பஸ் நிலைய பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. புதிய பஸ் நிலையம் திறக்கும் வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து ஏமாற வேண்டாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/buses-plying-on-chennai-route-718942