சென்னை: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம், நகரில் ரோப் கார் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் ரோப் கார் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக “பர்கர், சாண்ட்விச்” தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
ஐடியா கேட்ட அமைச்சர்
அண்மையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் நகரை அழகுபடுத்த புதுவித யோசனைகளை முன்வைக்குமாறு பெருமாநகராட்சி கவுன்சரிலர்களிடம் கேட்டுக் கொண்டார். அதில் ஏராளமான புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிலர் ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.
மெரினாவில் ரோப் கார் சேவை
இதனைத்தொடர்ந்து சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வரும் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரோப் கார் சேவை பற்றி சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
முதல் சேவை எங்கு?
இதனால் சென்னையில் ரோப் கார் சேவை முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்ட் வரை தொடங்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது. சுமார் 3 கி.மீ தூரம் வரை ரோப் கார் சேவையை முதலில் தொடங்கவும், பின்னர் ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து, நேப்பியர் பாலம் வரை ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இறுதி முடிவு
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் புதிய திட்டங்கள் விரைவில் நிர்வாக் அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து, ரோப் கார் சேவை குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rope-car-service-is-coming-to-marina-under-singara-chennai-2-0-project-464782.html