என் குப்பை.. என் பொறுப்பு.. சென்னை மேயர் பிரியாவின் சேலஞ் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க ஏதுவாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கோரிக்கை வைத்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் அதிக அளவு மாசு சேர்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து  குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டே இத்தடை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக “மீண்டும் மஞ்சப்பை” இயக்கத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தியது. இதேபோல், குப்பைகளை மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள் போன்ற மக்காத குப்பைகளை தனியாகவும் வழங்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: பெண் குழந்தை பிறந்ததால் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை – கணவன் மீது புகார்

அவ்வாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய வீட்டு உபயோக குப்பை என வகை பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 (தனி நபர் வீடுகள்), ரூ.1,000 (அடுக்குமாடி குடியிருப்புகள்), ரூ.5 ஆயிரம் (அதிக குப்பையை உருவாக்குபவர்கள்) அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநாகராட்சி மேயர் பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேயர் பிரியா

இது தொடர்பான சவாலில் பங்கேற்க சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் , துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோருக்கும் பிரியா அழைப்பு விடுத்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் நபர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த லிங்கில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் உள்ளன.

உங்கள் நகரத்திலிருந்து(Chennai)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/chennai-corporation-mayor-priya-source-segregation-challenge-2022-769304.html