சென்னை : சரிவர பணியாற்றாத மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாயும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
துணை மேயர், மாநகர ஆணையருக்கு மேயர் பிரியா சவால்.. ரெண்டு கலர் குப்பைத் தொட்டிகளோடு.. என்ன விவரம்?
சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில்லை. அவரவர் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், பிறரது பாதுகாப்புக்காக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
மேயர் பிரியா
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை வாய்ப்பு முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், “தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மாஸ்க் கட்டாயம்
சென்னையில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 87% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பொது இடத்துக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில்லை. அவரவர் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், பிறரது பாதுகாப்புக்காக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மழைநீர் வடிகால் பணிகள்
தொடர்ந்து பேசிய சென்னை மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சியில் 1,300 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது வரை மொத்தமாக 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை 100 சதவீதம் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
நடவடிக்கை பாயும்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகளை சரியாகச் செய்யாவிட்டால் அதை மீண்டும் சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாகப் பணியாற்றாத மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mayor-priya-rajan-warns-corporation-contractors-465758.html