சென்னை: சென்னையில் பூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்தார்களிடம் இருந்து அபராதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பூங்கா துறை சார்பில் 738 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 571 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்காக்களில் புல், செடி, கொடிகளை அகற்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும் ஒப்பந்தந்தின் படி முறையாக அந்த ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய வேண்டும்.
பதிவேடு வைத்தல் அவசியம்
அதன்படி பூங்காவில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பொதுமக்களுக்கான புகார் பதிவேடு வைத்தல், பூங்காவின் விசிட்டிங் நேரத்தை எழுதி வைத்தால் உள்ளிட்டவற்றை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இதில் ஏதேனும் விதிகள் மீறப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதங்கள் விதிக்கப்படும்.
அபராதம் எவ்வளவு?
அதன்படி பராமரிப்பு பணி காவலர், தூய்மை பணியாளர், தோட்ட பராமரிப்பாளர் குறைந்த அளவில் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 3 முறைக்கு மேல் ஆள்பற்றாக்குறை இருந்தால் பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதோடு பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு ரூ.600, கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு ரூ.2000 அபராதமாக விதிக்கப்படுகிறது.
பூங்காக்களில்
மேலும் பூங்காவில் உள்ள மரம் செடி கொடி மற்றும் புல் தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் பூங்காக்களின் அளவை பொறுத்து ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி பூங்கா துறை சார்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் இம்மாதம் 7 தேதி வரை ஆய்வு செய்யப்பட்டன.
87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்
இந்த ஆய்வின்போது 18 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தை மீறி குறைவான ஆட்கள் வைத்து பணி செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.28,090 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல், 69 ஒப்பந்ததாரர்கள் சரியாக பூங்காவை பராமரிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-fine-for-87-park-contractor-for-lack-of-maintenance-466134.html