சென்னை: கள்ளக்குறிச்சி போராட்டம் மற்றும் கலவரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க வாட்ஸ் ஆப் குழுக்களை போலீசார் மற்றும் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கலவரம் வாட்ஸ் ஆப்பில் திட்டமிடப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து வாட்ஸ் ஆப் அட்மினை கைது செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவி மரணம்..பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆக.1 வரை நீதிமன்ற காவல் – சேலம் சிறையில் அடைப்பு
போலீஸ் வட்டார தகவல்களின்படி, மொத்தம் 500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் போராட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியாக பல வாட்ஸ் ஆப் அட்மீன்கள் கடந்த 2 நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வாட்ஸ் ஆப் குழு
இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் வாட்ஸ் ஆப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள பச்சையப்பாஸ், கந்தசாமி கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாம் போராட வேண்டும். சென்னையில் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று விவாதம் செய்துள்ளனர்.
மரணம்
அதோடு இந்த மரணம் குறித்த பல விஷயங்களை அந்த குழுவில் அவர்கள் பகிர்ந்து உள்ளனர். சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். சென்னை அண்ணா நபர் ரவுண்டானா பகுதியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் உளவுத்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அண்ணா நகர் போலீஸ்
உடனே தகவல் அண்ணா நகர் போலீசுக்கு இரவே அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று அண்ணா நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு அந்த குழு உறுப்பினர்களை டிசி விஜய்குமார் சார்பாக போலீசார் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதில் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது. மீறி ஈடுபட்டால் உங்கள் கல்வி பாதிக்கப்படும்.
கடும் நடவடிக்கை
உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் எதிர்காலம்தான் இதனால் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதோடு இந்த தகவலை அவர்கள் மெசேஜாக அந்த குறிப்பில் அனுப்பி உள்ளனர். ஹ்யூமானிட்டி என்ற பெயரில் இந்த குழு செயல்பட்டு வந்து இருக்கிறது. இதில் 317 பேர் இருந்துள்ளனர். சென்னையில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
10 மணி
கல்லூரிகள் முன் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு போராட்டம் செய்யலாம் என்று அந்த குழுவில் திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் குழுவில் எச்சரிக்கை விடுத்த காரணத்தால் இதுவரை சென்னையில் எங்கும் மாணவர்கள் போராட்டம் செய்யவில்லை. இருப்பினும் கல்லூரிகளுக்கு முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/how-did-chennai-police-avoid-a-protest-against-kallakurichi-issue-in-nick-of-the-time-467197.html