சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் நேற்றே பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பிரிவுபசார விழா, இன்று நடைபெறும் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 22-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது, அதிமுகவில் நிலவும் உட்கட்சி குழப்பம்தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்கவும் பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.
கடந்த 22-ம் தேதி மாலை, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு பிரதமர் மோடி வழங்கிய பிரிவுபசார விழா விருந்தில் பழனிசாமி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்து பழனிசாமி கலந்துரையாடியுள்ளார். ஆனால், அவர்களை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டபோது,நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது 4 நாள் டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு பழனிசாமி நேற்றே சென்னை திரும்பினார்.
டெல்லியில் இன்று திரவுபதிமுர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பழனிசாமி பங்கேற்கவில்லை. தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் இதில் பங்கேற்குமாறு பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாககூறப்படுகிறது.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரதமர் மோடிசார்பில் முக்கிய நபர் ஒருவர் ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்டுநேற்று உடல்நலம் விசாரித்ததாகவும், அதனால் ஓபிஎஸ் மிகுந்தமகிழ்ச்சியில் இருப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டபோது,நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/830896-edappadi-k-palaniswami-returned-to-chennai-early-from-delhi.html