எப்படி கணக்கிடப்படுகிறது சொத்து வரி? – ஆன்லைனில் அறிய சென்னை மாநகராட்சி புதிய வசதி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சொத்து வரி எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை இணையதளம் மூலம் அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

புதிய சொத்து வரி நோட்டீஸில் நீங்கள் புதிதாக கட்ட வேண்டிய சொத்து வரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்து வரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும். உங்களின் பகுதியில் அடிப்படை தெருக் கட்டணம் எவ்வளவு என்பதை அடிப்படையாக இந்த புதிய சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.

ஆனால், எப்படி இந்த புதிய சொத்து வரி கணக்கீடு செய்யப்பட்டது என்ற விவரம் இருக்காது. இந்நிலையில், சொத்து வரி எப்படி கணக்கீடு என்பதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி இணையதளத்திற்கு சென்று உங்களின் சொத்து வரி பில் தொடர்பான விவரங்களை அளித்தால் எப்படி சொத்து வரி கணக்கீடு செய்யப்படுகிறது என்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/834987-chennai-corporation-has-made-it-easy-to-know-how-property-tax-is-calculated.html