சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 5000 காவலர்கள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,

சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார், சரட்கர் ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 5,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர்த்து சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/839860-5000-policemen-on-security-duty-in-chennai-for-independence-day-celebration.html