சென்னை மாநகராட்சி பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி மாசு ஏற்படுத்தியவர்களிடமிருந்து ரூ.15 லட்சத்து 63 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ென்னை மாநகராட்சி சார்பில் மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க ‘சிங்கார சென்னை 2.0’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை- துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும்வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக.18 முதல் செப்.2 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 39 ஆயிரம் அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 211 பேர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 லட்சத்து 63 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னைமாநகராட்சிக்கு உட்பட்ட பொதுஇடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல்,பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னையை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/861725-littering-in-public-places-in-violation-of-rules.html