சென்னையில் குட்கா விற்பனை: ஒரே வாரத்தில் 109 பேர் கைது | Selling Gutka in Chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் ஒரே வாரத்தில் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தங்கள் காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஒரே வாரத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது, பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பு உடைய 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருவோர், விற்பனை செய்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/crime/865098-selling-gutka-in-chennai.html