சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை போல சைதாப்பேட்டையில் ரூ.230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணிய – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை போல சைதாப்பேட்டையில் ரூ.230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு முறை உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களை பெரியார் மேற்கொண்டதாக கூறினார். தொடர்ந்து பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த புரட்சிகர திட்டங்களையும், கலைஞர் ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

இந்த தலைவர்களின் வரிசையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருப்பது பாராட்டிற்குரியது எனவும் கூறினார். முன்னதாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையானது இந்தியாவின் 2-வது முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருவதாக கூறினார்.

 ரூ.230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை சைதாப்பேட்டையில் அமைய இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் ரூ.40 கோடி செலவில் காந்தி மண்டபத்தை புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறினார்.

எல்லோரும் மகிழக்கூடிய வகையில் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பான ஆட்சியை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=803887