இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மெட்ராஸ் படைப்பிரிவு வீரர் ஒருவருடன் சரளமாக தமிழில் பேசி அசத்திய காணொளி வெளியாகியுள்ளது.
திபெத் எல்லை அருகேயுள்ள தவாங்கின் ஓம்தாங் எனும் பகுதியில் இந்த இருவருக்கிடையே நடந்த சிறிய உரையாடல் தமிழில் இடம்பெற்றது. டாக்டர் லாம் டோர்ஜி எனும் இந்த மருத்துவர், தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றதால், தமக்கு தமிழ் பேச தெரியும் என்று கூறினார்.
இவர்களது உரையாடலைக் காட்டும் காணொளியை வெளியிட்ட அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, “உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு இது ஓர் உதாரணமாகும். எங்கள் மொழியியல் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: https://www.tamilmurasu.com.sg/india/story20221005-97403.html