மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் தான் மருத்துவ உதவியாளர் பாட திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் தொடங்கிய பிறகே, மருத்துவ உதவியாளர் பாட திட்டம், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.  மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், மருத்துவ உதவியாளர் பாட திட்டம் நிறுவியதன் 30வது ஆண்டு விழா மற்றும் தேசிய மருத்துவ உதவியாளர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜூ ஜார்ஜ், டாக்டர்கள் அஜித் முல்லாசாரி, ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மருத்துவ உதவியாளர் படிப்பின் மதிப்பு மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் நிறுவப்பட்ட பிறகே புரிந்தது, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்த பட்ட படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை அரசு மருத்துவ கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்து கல்லூரியை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த கட்டத்தில் நாங்கள் ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

தொடர்ந்து, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் கவுரவ செயலாளர் எம்.எம்.பிலிப் பேசியதாவது:  மருத்துவர் அசோசியேட் படிப்புகள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மற்றும் சென்னைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மருத்துவமனைகளுக்கு உதவியுள்ளன. இந்த பாடத்திட்டம் எல்லா இடங்களிலும் சரியாக செயல்பட வில்லை. எங்கள் பட்டதாரிகள் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பேசினர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=804830