சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை: தீர்வு காண பல்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சாலை பணிகளால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மெட்ரோ ரயில் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளால், வாகனங்கள் செல்லும் வழிகள் குறுகுவதால், சாலைகளில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் மற்றும் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், நெடுஞ்சாலைத் துறைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மற்றும் பொறியாளர்கள், சென்னை போக்குவரத்து அதிகாரிகளுடன் சிறப்புக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு முக்கிய முடிவுகளின் விவரம்:

சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையிலிருந்து பெறப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளுக்கான அனுமதிகளை சென்னை காவல்துறையினர் விரைந்து அளிக்கும் வகையில் நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும்.

தற்போது நடைபெற்று வரும் அனைத்து பணிகளிலும், எவையெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பணிகள் என பட்டியலிட்டு சென்னை மாநகராட்சிக்கும் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் வழங்கி அப்பணிகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

பணிகள் முடிந்த மற்றும் நிலுவையில் உள்ள இடங்களில், பணிகள் நிறைவடைந்தவுடன் சாலையின் முன்பு இருந்த தரமான நிலைக்கு சாலையைக் கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல்துறை இரு துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மழைநீர் வடிகால் விடுபட்ட இணைப்பு தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க, முன்னுரிமை அளிக்கப்படும். இனிமேல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆனது முறையான மற்றும் விரைவான அனுமதியை உறுதி செய்வதற்காக சாலைகளின் குறுக்கே மற்றும் நெடுக்கே வெட்டுவதற்கான பணிகளின் அனுமதியைப் பெறுவதற்கு ஒற்றை சாளர அமைப்பை நடைமுறைப்படுத்த உள்ளது.

இரவில் மழைநீர் வடிகால் பணிகள் செய்யும் இடங்களில், தேவையான அறிவிப்புகள் மற்றும் தடுப்புகள் அமைத்து சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட துறைகளின் வேண்டுகோளின் பேரில், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவை வாகனங்களை பகல் நேரங்களிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் நகர சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/881334-find-a-solution-traffic-jam-in-chennai-due-to-road-work.html