4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5904 சதுர கிமீ பரப்பளவுக்கு விரிவடையும் சென்னை – இந்தியாவின் 3-வது பெரு நகரமாகிறது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகர எல்லையானது 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கிமீ.ல் இருந்து 5,904 கிமீ.க்கு விரிவாக்கம் பெறுகிறது.

சென்னை பெருநகர் திட்டப்பகுதி, கடந்த 1975-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி, நகராட்சிகளாக இருந்த ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 கிமீ பரப்பைக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகள் இவற்றைக் கருத்தில்கொண்டு, சென்னை பெருநகரின் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, 2017-18-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி,சென்னை மற்றும் அருகில் உள்ளகாஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தைச் சேர்த்து 8,878 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரிவாக்க எல்லை தொடர்பாக அரசாணையும் 2018-ல் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்து களும் கேட்கப்பட்டன.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்றது. இதையடுத்து, சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கம் பொதுமக்கள் ஆலோசனைக்குப்பின் மேற்கொள்ளப்படும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டு, வரைவு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விரிவாக்கத்துக்கு பரிந்துரைக்கும் முன், விவசாயம் அல்லாததொழிலில் ஈடுபட்டோர், பேருந்து, ரயில் பயணம், கடந்த 10 ஆண்டுகளில் நில உபயோக மாற்றம், கட்டிடம், மனைப்பிரிவு அனுமதிகள், சொத்துகள் பதிவு மூலம் முத்திரைக் கட்டணம் வசூல், நில பயன்பாடு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கடந்த அதிமுக ஆட்சியில் உத்தேசிக்கப்பட்ட 8,878 சதுர மீட்டருக்கு பதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என5,904 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சமீபத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சென்னைபெருநகர எல்லை 47 ஆண்டுகளுக்குப்பின் விரிவாக்கம் பெறுகிறது. அதன்படி தற்போதுள்ள 1,189 சதுர கி.மீட்டருடன் கூடுதலாக 4,715 சதுர கிமீ பரப்பு இணைந்து, 5,904 சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. இதில் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளன. இதன்மூலம் சென்னை பெருநகர மக்கள் தொகைஅளவு 1.59 கோடியாக இருக்கும்.

விரிவாக்கப்படும் சென்னை பெருநகரில், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி பகுதிகளில் 1,617 சதுர கிமீ.யும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)வின் கீழ் தற்போது உள்ள 1,189 சதுர கி.மீட்டரையும், திட்டமிடப்படாத பகுதிகளான 3,098 சதுர கி.மீட்டரையும் இணைத்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும், இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ள இதர பெரிய நகரங்களான பெங்களூரு பெருநகரம் (8,022 சதுர கிமீ). ஐதராபாத் பெருநகரம் (7,100 சதுர கிமீ) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, சென்னை பெருநகரம் விரிவடைந்த பகுதியாக உள்ளது. அதேநேரம், நாட்டின் தலைநகர் டெல்லி பெருநகரம் 1,482 சதுர கிமீ, மும்பை பெருநகரம் 4,355 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMipQFodHRwczovL3d3dy5oaW5kdXRhbWlsLmluL25ld3MvdGFtaWxuYWR1Lzg4ODI1Ni1zcHJlYWQtb3Zlci1hbi1hcmVhLW9mLTUtOTA0LXNxLWttLXdpdGgtNC1jb3Jwb3JhdGlvbnMtMTItbXVuaWNpcGFsaXRpZXMtY2hlbm5haS1iZWNvbWVzLWluZGlhcy0zcmQtbGFyZ2VzdC1jaXR5Lmh0bWzSAQA?oc=5